திருக்குறளில் உழைபொருண்மை நோக்கு

முனைவர் ப, கொழந்தசாமி, அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி.

        அற இலக்கியமான திருக்குறள் மொழி மற்றும் இலக்கியத் தொழில்நுட்பத்தைச் செவ்வனே கையாண்டு படைக்கப்பட்டுள்ளது. வாழ்வியல் விழுமங்களை விண்டுரைப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டிருப்பினும், இலக்கிய உத்திகளும் நடையியல் நுட்பங்களும் திருக்குறளில் செறிந்து காணப்படுகின்றன. காலப் பழமையாலும் திருக்குறளின் இலக்கண / தொடர் அமைப்பு நுட்பங்களாலும் ஆர்வமுள்ள அன்பர்களால் கூடச் சில குறட்பாக்களுக்கு எளிமையாகப் பொருளுணர இயல்வதில்லை. குறட்பாக்களை முறையாகவும் முழுமையாகவும் உணர்ந்துகொண்டால் தான் படைப்பின் பெருமையும் விளம்பப்படுகின்ற விழுமியத்தின் சால்பும் தெளிவாகி, அறநெறியைப் பின்பற்றும் உள்ளார்வம் மக்களிடம் பிறக்கும். அதனால் திருக்குறளை முறையாக உணர்ந்துகொள்ள மொழி, இலக்கண அமைப்புகளின் பொருண்மைத் தகைமையை அறிவது தேவையாகின்றது. இதற்கு உரைகள் துணையாகின்றன. குறட்பாக்களின் புரிதிறனில் உள்ள கடினத் தன்மை / மருட்சி ஆகியவற்றை நீக்கப் பொருண்மையியல் அணுகுமுறை உறுதுணையாகும். சான்றாக, திருக்குறளில் ஆளப்பட்டுள்ள உழை என்னும் சொல்லைக் கருதலாம். இச் சொல் அருகில், இடம் ஆகிய பொருளில் முறையே வினையெச்சமாகவும், ஏழாம் வேற்றுமையுருபாக இடைச்சொல்லாகவும்  ஆளப்பட்டுள்ளது. அமைப்புச் சூழலுக்கேற்பவும் தொடர்ப் பொருண்மை நோக்கிலும் இத்தகைய சொற்களை நுணுகி ஆராய்ந்து கருத்துணரவேண்டும். அதாவது ஒரு சொல் சூழலுக்கேற்பப் பல பொருளுணர்த்தும் பலபொருளொருசொல்லாக வழங்கப்படுவதுண்டு. உழை என்னும் சொல் திருக்குறளில் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறே இறை, எண், துணை , குறிப்பறிதல் போன்றவற்றையும் கருதலாம்.  இக் கட்டுரை உழை என்னும் சொல்லை மாறுபட்ட பல கருத்துகளில்  பலபொருளொருசொல்லாகவும் ஒப்புருச் சொல்லாகவும் திருவள்ளுவர் ஆண்டுள்ள பாங்கைப் பகர்வதாக அமைகின்றது.

உழை சொற்பொருள் :

  உழை என்னும் அடிச்சொல்லின் பொருளாகத் திருக்குறள் சொல்லடைவு(.53) ,

          அருகிடம்,  இடத்தில்

ஆகியவற்றையும்,  பாவாணரின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி ( பக். 134 )

         பூவிதழ், மான், மாடு, யாழ் நரம்பு, வைகறை, கதிரவன் மனைவி, வாணாசுரன் மகள் என்னும் பெயர்ப் பொருளையும்;  ஈட்டுதல், முயற்சித்தல் என்னும் வினைப் பொருளையும்;  ஏழாம் வேற்றுமை இடைச்சொல் பொருளையும்

சுட்டுகின்றன. இதனால் உழை என்னும் சொல் பெயராகவும் வினையாகவும் இடையாகவும் தமிழில் பழங்காலத்திலிருந்து வழங்கிவருவது விளங்கும். இக்காலப் பேச்சு வழக்கிலும் இது உழைத்தான் என்று வினையாக ஆளப்படுகின்றது.

கண், கால், புறம், அகம், உள், உழை, கீழ், மேல்,
பின், சார், அயல், புடை, தேவகை, எனாஅ-
முன், இடை, கடை, தலை, வலம், இடம், எனாஅ-
அன்ன பிறவும் அதன் பால' என்மனார்
. ( தொல்காப்பியம், 566 )

 

கண்,கால் ,கடை,இடை, தலை,வாய், திசை,வயின்

முன்,சார், வலம், இடம் மேல்,கீழ் ,புடை,முதல்

பின்,பாடு,அளை,தேம் ,உழை,வளி, உழி, உளி

உள்,அகம் ,புறம், இல் ,இடப்பொருள் உருபே (நன்னூல் , 302)

 

என்னும் நூற்பாக்கள் இங்கு ஒப்பத்தக்கன. தொல்காப்பியமும் நன்னூலும் உழை என்பதனைச் சுட்டியுள்ளன. ஏழாம் வேற்றுமைக்கு நிறைய உருபுகள் காணப்படுகின்றன.

திருக்குறளில் உழை- சொல்லாட்சி அட்டவணை

குறள் எண்

சொல்லாட்சி             

சொற்பொருள்  

சொல் வகை

530


 உழைப்பிரிந்து

 

யாரிடம்

 

வினையெச்சம்

594

ஊக்க முடையா னுழை

இடம்

வே. உருபு / இடைச்சொல்

638

உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்
.

 

அருகில்

 

வினையெச்சம்

950

 

மருந்துழைச் செல்வான்

 

அருகில்

 

வினையெச்சம்

1249

நீ
யாருழைச் சேறி

 

யாரிடம்

 

வினையெச்சம்

இதனால் உழை என்னும் சொல்அருகில், இடம் ஆகிய பொருளில் முறையே வினையெச்சமாகவும், ஏழாம் வேற்றுமையுருபாக இடைச்சொல்லாகவும்  ஆளப்பட்டுள்ளதை அறியலாம்.  இவற்றுள் அருகில் என்பதை வள்ளுவம் சமூக அறவியல் பண்பாக வலியுறுத்துவது கூர்ந்து நோக்கத்தக்கது. அமைப்புச் சூழலுக்கேற்பவும் தொடர்ப் பொருண்மை நோக்கிலும் இத்தகைய சொற்களை நுணுகி ஆராய்ந்து கருத்துணரின் மானுடம் வெல்லும்.

                                     பயன்பட்டவை

தமிழ் இணையக் கல்விக்கழக மின்னூலக நூல்கள்.

                                         **********

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு