திருக்குறளில் நீக்கலும் நீங்கலும்– வழக்குப் பொருண்மைஒப்பு நோக்கு
ப.
கொழந்தசாமி, தமிழியல் துறைத் தலைவர், அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி.
தமிழுக்கும் தமிழருக்கும் புகழீட்டி,
மானுட மேன்மையை வாய்ப்பாக்குகின்ற நன்மறையான திருக்குறள், மொழி
மற்றும் இலக்கியத் தொழில்நுட்பத்தைச் செவ்வனே கையாண்டு படைக்கப்பட்டுள்ளது.
வாழ்வியல் விழுமியங்களை விண்டுரைப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டிருப்பினும்,
இலக்கிய உத்திகளும் நடையியல் நுட்பங்களும் திருக்குறளில் செறிந்து காணப்படுகின்றன.
வழக்குச் சூழலுக்கேற்பவும் தொடர்ப் பொருண்மை/ பயன்
மொழியியல் / நடையியல்/ குடிமையியல்/
எடுத்துரைப்பியல் நோக்கிலும் இத்தகைய கூறுகளை நுணுகி ஆராய்ந்து கருத்துணரவேண்டும்.
அப்போது படைப்பின் பெருமையும் விளம்பப்படுகின்ற விழுமியத்தின் சால்பும்
தெளிவாகி, அறநெறியைப் பின்பற்றும் உள்ளார்வம் மக்களிடம் இயல்பாகப்
பிறக்கும். அதனால் திருக்குறளை முறையாக உணர்ந்துகொள்ள மொழி,
இலக்கண அமைப்புகளின் பொருண்மைத் தகைமையை அறிந்திருக்கவேண்டியது தேவையாகின்றது.
இந்த நோக்கத்தில், அறவியல் வகுத்தற்கு நீக்கல்,
நீங்கல் ஆகிய துறைச்சொற்களை வள்ளுவம் இயக்கியுள்ள பாங்கைப் பகர்ந்து
, இச் சொற்களின் வழக்குப் பொருண்மையை ஆய்வதாக இக் கட்டுரை இயல்கின்றது.
இதன்மூலம் வள்ளுவ மாண்பினையும் அறவியலையும் வெளிப்படுத்த இயலும். இந்தச் சொற்களின் மூலம் நடத்தை விழிப்புணர்வை விதைக்க வள்ளுவம் விழைகின்றது என்பது
இக் கட்டுரையின் கருதுகோளாகும்.
நீக்கல் – சொற்பொருள் :
பன்மொழி மின்னியல் அகரமுதலியான விக்சனரி நீக்கல் என்னும்
பெயர்ச்சொல்லின் பொருளாக நீக்குதல், அழித்தல் ஆகியவற்றைச் சுட்டுகின்றது. செந்தமிழ்ச்
சொற்பிறப்பியல் பேரகரமுதலி மாறுபட்ட ஐந்து பொருள் கூறி,
அகற்றல், நீக்குதல், போக்கல்,
விலக்கல் ஆகிய பொருளை வழக்குப் பொருண்மை நோக்கில்
குறிக்கின்றது.
சாமி வேலாயுதம் தொகுத்த திருக்குறட் சொல்லடைவு (ப.173 ), துறத்தல், அகற்றல்,
நீக்குதல், போக்கல், விலக்கல் ஆகிய பொருளை வழக்குப் பொருண்மை நோக்கில் குறிக்கின்றது.
இந்தப் பின்னணியில் , நீக்கல் என்னும் சொல் திருக்குறளில் வழங்கும் அட்டவணை வருமாறு:
|
குறள் எண் |
வருகை |
கருத்து |
|
194 |
நன்மையின் நீக்கும் |
விலக்கல் |
|
327
|
தன்னுயிர் நீப்பினும் |
போக்கல் |
|
327 |
இன்னுயிர் நீக்கும் |
போக்கல் |
|
330 |
உயிர் உடம்பின் நீக்கியார் |
போக்கல் |
|
384 |
அல்லவை நீக்கி |
அகற்றல் |
|
436 |
தன் குற்றம் நீக்கி |
துறத்தல் |
|
442 |
உற்ற நோய் நீக்கி |
விலக்கல் |
|
685 |
தூவாத நீக்கி |
விலக்கல் |
|
787 |
அழிவனவை நீக்கி |
விலக்கல் |
|
920 |
திரு நீக்கப்பட்டார் |
விலக்கல் |
|
1160 |
அல்லல் நோய் நீக்கி |
போக்கல் |
நீக்கல் என்கின்ற சொல் நீப்பின்,
நீக்கப்பட்டார் என்றும், வினையெச்சம்; வினையாலணையும் பெயர்; வினைமுற்று ஆகிய வடிவங்களிலும் வழங்கப்பட்டுள்ளதை மேற்படி அட்டவணையால்
அறியலாம். இதனால் நீக்கல்
என்கின்ற வினைச்சொல் வேறுபட்ட பொருளில் பயில்வதையும், சிறப்பாக
அகற்றல், விலக்கல் என்னும் கருத்தில் ’தேவையற்ற / அழிவை ஏற்படுத்துகின்ற ஒன்றைத் தன்னை அண்டாமல் விரட்டல்’ என்னும் விழிப்புணர்வை ஏற்படுத்த, பிறவினைச் சொல்லாகத் திருக்குறளில் ஆளப்படுவதையும் தெளியலாம்.
நீங்கல் :
சொற்பொருள்:–
பன்மொழி மின்னியல் அகரமுதலியான விக்சனரி நீங்கல் என்னும்
வினைச்சொல்லின் பொருளாக விலகுதல், பிளத்தல் ஆகியவற்றைச் சுட்டுகின்றது. செந்தமிழ்ச்
சொற்பிறப்பியல் பேரகரமுதலி( ப. 131 ) மாறுபட்ட மூன்று பொருள் கூறி, அகறல், நீங்குதல் ஆகிய பொருளை வழக்குப் பொருண்மை நோக்கில்
குறிக்கின்றது. சாமி வேலாயுதம் தொகுத்த திருக்குறட் சொல்லடைவு
(பக்.173-174 ), அகறல், கெடுதல், இழத்தல், விலகல் ஆகிய பொருளை வழக்குப் பொருண்மை நோக்கில் குறிக்கின்றது.
நீங்கல் என்னும் சொல் திருக்குறளில் வழங்கும்
அட்டவணை வருமாறு:
|
குறள் எண் |
வருகை |
கருத்து |
|
98 |
சிறுமையுள் நீங்கிய இன்சொல் |
துன்பம் தராத |
|
154 |
நிறையுடைமை நீங்காது வேண்டின் |
அகறல் |
|
195 |
சீர்மை சிறப்பொடு நீங்கும் |
அகறல் |
|
246 |
பொருள் நீங்கி |
அகறல் |
|
246 |
அருள் நீங்கி |
அகறல் |
|
341 |
யாதனின் நீங்கியான் |
தவிர்த்தல் |
|
352 |
இருள் நீங்கி |
அகறல் |
|
352 |
மருள் நீங்கி |
அகறல் |
|
353 |
ஐயத்தின் நீங்கி |
அகறல் |
|
358 |
பேதைமை நீங்க |
அகறல் |
|
383 |
மூன்றும் நீங்கா |
விலகல் |
|
495 |
அடும்புனலின் நீங்கின் |
அகறல் |
|
502 |
குற்றத்தின் நீங்கி |
அகறல் |
|
519 |
நீங்கும் திரு |
அகறல் |
|
562 |
ஆக்கம் நீங்காமை |
அகறல் |
|
592 |
நில்லாது நீங்கிவிடும் |
அகறல் |
|
864 |
நீங்கான் வெகுளி |
அகறல் |
|
1104 |
நீங்கின் தெறூஉம் |
விலகல் |
|
1124 |
அன்னள் நீங்கும் இடத்து |
விலகல் |
|
1155 |
அவர்நீங்கின் |
விலகல் |
|
1216 |
காதலர் நீங்கலர் |
விலகல் |
|
1234 |
பணை நீங்கி |
குறைதல் |
|
1234 |
துணை நீங்கி |
விலகல் |
|
1265 |
நீங்கும் என் மென்தோள் |
தீர்தல் |
நீங்கல் என்கின்ற சொல் நீங்கலர்
என்றும், பெயரெச்சம்; வினையெச்சம்;
வினைமுற்று, தொழிற்பெயர் ஆகிய வடிவங்களிலும் வழங்கப்பட்டுள்ளதை
மேற்படி அட்டவணையால் அறியலாம். இதனால் நீங்கல் என்கின்ற வினைச்சொல் அறத்துப்பாலிலும் பொருட்பாலிலும் தீமையைத்
தவிர்த்தல் என்கின்ற விழிப்புணர்வுத் துறைச்சொல்லாகவும்; காமத்துப்பாலில்
பிரிவைச் சுட்டுகின்ற உளவியல் துறைச்சொல்லாகவும் வேறுபட்ட பொருளில் பயில்வதையும்,
சிறப்பாக அகறல், விலகல் என்னும் கருத்தில் ’தேவையற்ற / அழிவை ஏற்படுத்துகின்ற ஒன்றிலிருந்து தன்னை
விலக்கிப் பாதுகாத்துகொள்ளல் என்னும் விழிப்புணர்வை
ஏற்படுத்த, தன்வினைச் சொல்லாக முன்னிரு
பால்களிலும், காமத்துப்பாலில் தலைமக்களுக்கிடையிலான பிரிவை உணர்த்துவதாகவும்
திருக்குறளில் ஆளப்படுவதையும் தெளியலாம்.
நீக்கல்;
நீங்கல் ஆகிய துறைச்சொற்களின் வாயிலாகவும்
திருக்குறள் மானுட மேன்மைக்கான விழுமியங்களை வழிமொழிந்துள்ளது.
இவ்வாறு வள்ளுவ அறவியலை / நடையியலைச் சொற்பொருண்மை
நோக்கில் அணுகினால் கருத்துத் தெளிவு சிறக்கும்.
பயன்பட்டவை
சாமி வேலாயுதம்
( 2005 ) , திருக்குறட் சொல்லடைவு, சென்னை;
தென்னிந்திய தமிழ்ச் சங்கம்.
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி,
ஐந்தாம் மடலம், - இரண்டாம் பாகம், பக்.129-132. தமிழ் இணையக் கல்விக் கழக மின்னூலகம்.
விக்சனரி
, பன்மொழி மின்னியல் அகரமுதலி, கூகுள் இணையதளம்.
Comments
Post a Comment