வள்ளுவர் வெறுத்த ஏழை
முனைவர் ப. குழந்தைசாமி,
புதுச்சேரி.
ஏமுற்றவரினும் ஏழை
தமியனாய்
பல்லார் பகைகொள்பவன் ( பகைத்திறம் தெரிதல்,
873)
என்னும்
குறட்பாவில் , பகை என்னும்
ஏளனத்திற்குரிய அரசனின் உளப் பணபையும் அழிவை ஏற்படுத்துகின்ற செயன்முறையையும் வள்ளுவம்
கடிகின்றது. 873ஆம் குறட்பாவில், விளையாட்டிற்காகக்
கூடப் பகை கொள்ளக்கூடாது என்று எச்சரித்த வள்ளுவர், அது பண்பற்ற/
பயனற்ற பிறழ் மனநிலை என்று அறுதியிடுகின்றார்; பகைவனிடமும் நட்பாடுவதைப் பாராட்டி, இது சீரிய உள்ளப்
பண்பு என்று பரிந்துரைக்கின்றார். மன்னனின் உளவியலும்,
செயல்பாடுகளும் ஒட்டுமொத்த நாட்டையே பாதிக்கும்; அதனால் அறிவுநுட்பத்தோடு, சீரிய பண்புநலன்களோடு ஒரு நாட்டின்
தலைவன் ஆளவேண்டும் என்பது இவண் வலியுறுத்தப்படுகின்றது. இதை அறியாமல்
தன்னந்தனியனாய்ப் பல நாட்டு மன்னர்களோடு பகைபாராட்டல் அறிவுடைமையோ நல்லாட்சி முறையோ
ஆகாது; இதைச் செய்ய முனைகின்ற மன்னனை அறிவில்லாதவன் /
ஏழை என்று வள்ளுவம் கடிகின்றது. பொருள்
/ பணப் பற்றாக்குறையை விட, அறிவு வறட்சி தீங்கானது என்னும் அரசியல் அறநெறி இங்கு வகுத்துரைக்கப்படுகின்றது. முடியாட்சிக்கு மட்டுமல்லாமல் குடியாட்சிக்கும்; ஆட்சியாளர்
மட்டுமின்றி, அனைத்து மக்களுக்கும் இவ் அறநெறி ஏற்புடையதே.
அறிவு வறட்சி வேண்டாம்: பிறழ் உணர்ச்சி தவிர்க்கப்பட்டு,
விளைவறிந்து வினையாற்றுகின்ற அறிவாண்மையே மனிதனை இயக்கவேண்டும்.
இங்கு ஏழை என்னும் எளிய சொல்லின் மூலம் சீரிய ஆட்சித் திறத்தை
/ உணர்ச்சி மேலாண்மையை வள்ளுவம் வகுத்துரைத்துள்ளது. வள்ளுவம் உணர்ந்து வாழ்வாங்கு வாழ்வோம்.
--------
Comments
Post a Comment