வள்ளுவத்தில் ஏஎர்/ ஏர்பொருண்மையியல் நோக்கு  

                                 முனைவர் .கொழந்தசாமி,  தமிழியல் துறைத் தலைவர்,

அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி 605 008.

 

            திருக்குறளில் சொற்கள் வாழ்வியல் விழுமியத்தை எடுத்துரைக்க, பொருண்மை நுட்பத்துடன் ஆளப்பட்டுள்ளன; ஒவ்வொரு சொல்லையும் தொடர் அண்மையுறுப்புச் சூழல், பொருட்களன், மொழி வரலாறு ஆகியவற்றின் அடிப்படையில் தெளிந்தால் பனுவலின் பயனை முழுமையாக அடையலாம். அவ் வகையில் வள்ளுவத்தில் ஏஎர்/ ஏர் ஆகியன கருத்துநுட்பத்தோடு ஆளப்பட்டுள்ளதை விளக்குவதாக இக் கட்டுரை இயல்கின்றது. மக்களின் பொது வழக்கோடு, இலக்கியச் சிறப்பு வழக்கிலும் படைப்பாளர்கள் சொற்களைப் பெய்வதால்சிறப்புச் சொற்களைக் கூர்ந்துநோக்கிப் பொருளுணர முயலலாம்.

வள்ளுவத்தில் ஏஎர் ; அட்டவணை

குறள் எண்

குறளில் சொல்லாட்சி

கருத்து

1053

இரப்பும் ஓர் ஏஎர் உடைத்து

பெருமை / எழுச்சி

1098

உண்டு ஆண்டு ஓர் ஏஎர்

அழகு

1305

நல்லவர்க்கு  ஏஎர்

அழகு / பெருமை

 

     மேற்படி அட்டவணைப்படி, மூன்று குறட்பாக்களில் ஏஎர் என்னும் பெயர்ச்சொல் காணப்படுகின்றதுஇவை மானுட மேன்மையான, பிறர் விரும்பிப் போற்றுகின்ற பெருமையைக் குறிக்கின்றன. மானுடத்தை மிளிர்விக்க, சீரிய மனித எண்ணங்களையும் செயல்பாடுகளயும் காட்டிப் போற்றவேண்டியமை அற இலக்கியக்கியத்தின் கடமை ஆகும். அதனால் தக்கோரிடம் இரத்தலைப் பெருமையாகவும், உயிர் வாழ்கின்ற எழுச்சியைத் தருவதாகவும் 1053இல் வள்ளுவம் சுட்டுகின்றதுஅதோடு ஈதலின் தேவையும் இங்குக் குறிப்பாக உணர்த்தப்படுகின்றது. அவ்வாறே 1098இல் தலைவியின் உடல்மொழியான மெய்ப்பாட்டில் வெளிப்படுகின்ற அழகு பாராட்டப்பட்டுள்ளது. தொல்காப்பியப் பொருளியலில் ( நூற்ப, 53 ) இனிய தோற்றப்பொலிவு என்னும் பொருளில் ஏர் சுட்டப்பட்டுள்ளது. 1305இல் தலைவியின் ஊடலை உணர்ந்து நீக்குகின்ற தலைவனின் எண்ணச் சீர்மை பெருமைக்குரியதாகப் போற்றப்பட்டுள்ளது.  இவை மனித வாழ்க்கையைப் பொருளுடையதாக மாற்றவல்லன. பதிற்றுப்பத்தின் 26ஆம் பாடலில் ஏஎர் என்பது உழவையும்நற்றிணை 267ஆம் பாடலில்  மகளிர் அழகையும் குறிப்பதை இவண் ஒப்பலாம்.

வள்ளுவத்தில் ஏர் ; அட்டவணை

குறள் ண்

குறளில் சொல்லாட்சி

கருத்து

014

ஏரின் உழாஅர் உழவர்

கலப்பை

872

வில்லேர் உழவர்

அம்பு

872

சொல்லேர் உழவர்

எழுத்தாணி

1031

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்

உழவுத் தொழில்

1038

ஏரினும் நன்றால் எருவிடுதல்

உழுதல்

1089

பிணை ஏர் மடநோக்கு

போன்ற

1272

காம்பு ஏர் தோள் [மூங்கில் போன்ற]

போன்ற

                           

அடுத்து வள்ளுவத்தில் பெயராகவும் இடையாகவும் ஏர் இயல்வதை, மேற்படி அட்டவணையால் தெளியலாம்.  014, 872 ஆகிய குறட்பாக்களில் துணைக்கருவிகளான கலப்பை, அம்பு, எழுத்தாணி ஆகியவற்றைக் குறிக்கின்ற ஒன்றன்பால் ஆகுபெயர்களாகவும், 1031, 1038 ஆகிய குறட்பாக்களில் ஆகுபெயராக உழவுத் தொழிலையும், ஏரோட்டலையும் குறிக்கின்ற பெயர்களாகவும் இயல்கின்றது. இவை இலக்கண / பொருள் தொடர்புடையவை. ஆனால் 1089, 1272ஆம் குறட்பாக்களில் போன்ற என்னும் இடைச்சொல்லாக / ஒப்பிடுகின்ற உவம உருபாக ஆளப்பட்டுள்ளது. ” பிணை ஏர் நோக்கு “     (குறிஞ்சிப் பாட்டு, அடி 154 ), ” முத்து ஏர் முறுவலார் சொல் இனிது “ (இனியவை நாற்பது, பா 01 ) போன்ற இலக்கியப் பதிவுகளில், உவம உருபாக ஆளப்பட்டுள்ளமை  இவண் ஒப்பத்தக்கது

இவ்வாறாக, ஏர் என்னும் பழஞ்சொல்லை அளபெடையாக்கிச் சீர்மையைக் குறிக்கின்ற பெயர்ச்சொல்லாகவும்; இயல்பாக ஆகுபெயராகவும் உவமவுருபாகவும் நுட்பமாக வள்ளுவம் ஆண்டிருப்பதை நோக்கிக் கருத்தறிந்து முழுதறியலாம்.

பயன்பட்டவை

கூகுள் இணையதள, தமிழ் இணையக் கல்விககழகத் தரவுகள்.

********

 

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு