பொலந்தொடி / முன்றில்புணர்ச்சி / கருத்து விளக்கம்

முனைவர் ப. கொழந்தசாமி, அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி.

சங்க இலக்கியங்கள் முதலிய தொன்மையான இலக்கியங்களை நோக்கும்போது பொலந்தொடி , பொலந்தார், முன்றில்  போன்ற சொல்லாட்சிகளைக் கடக்க நேரிடும். இவை திரிபடைந்த சொற்கள்; திரிபு நீக்கிப் பொருளுணரவேண்டும்.

 பொற்றொடி என்பது பொலந்தொடி என்று திரிந்து வழங்குகின்றது. இதற்கான புணர்ச்சி விளக்கம்,

 பொன்னென் கிளவி ஈறுகெட முறையின்

                 முன்னர்த் தோன்றும் லகார மகாரம்

             செய்யுள் மருங்கின் தொடரியலான ( புள்ளி மயங்கியல் ,நூற்பா, 61 )

 

என்னும் தொல்காப்பிய நூற்பாவில் விளக்கப்பட்டுள்ளது. அதாவது, செய்யுள் தொடரமைப்பில், பொன் > பொலம் என்று திரிகின்றது. அதனால் பொன்+தொடி பொலந்தொடி என்று திரிகின்றது. இது புணர்ச்சித் திரிபன்றிப் பொருள் மாற்றம் அன்று; பொருளில் மாற்றமில்லை. இவ்வாறே,

                     அணிலாடு முன்றில் ( குறுந்தொகை, 41;4 )

போன்ற தொடர்களில் இல்லத்தின் முன் பகுதி ( இல் + முன் ) முன்றில் என்று திரிபுடன் ஆளப்படுகின்றது. இதற்கான புணர்ச்சி விளக்கம்,

முன்னென் கிளவி முன்னர்த் தோன்றும்

இல்லென் கிளவிமிசை றகரம் ஒற்றல்

தொல்லியல் மருங்கின் மரீஇய மரபே     (புள்ளி மயங்கியல் , நூற்பா,60 )

 

என்னும் தொல்காப்பிய நூற்பாவில் சுட்டப்பட்டுள்ளது. அதாவது, இல், முன் ஆகிய சொற்கள் மாறியமைய, இடையில் றகர ஒற்றுப் பெற்று,

 முன் + ற் + இல் > முன்றில்

என்று திரிந்து,  முன்றில் என்று புணர்கின்றன.    சொற்பொருள் விளக்கத்தில் இத்தகைய திரிபுச் சொற்களை விதந்து, பிரித்துப் பொருளுணர்ந்து தெளியலாம்; பொருத்தமான பொருளை/ கருத்தை அறியலாம்இதற்கு இலக்கண விளக்கம் வாய்ப்பாகின்றது.

                                                                      பயன்பட்டது

தமிழண்ணல் ( உரை) 2008, தொல்காப்பியம், மதுரை; மீனாட்சி புத்தக நிலையம்.

                         

                                                                              *******

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு