அவை: போலி ஒப்புருச் சொல்லாக…
முனைவர் ப. கொழந்தசாமி,
அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி
தொன்மையான
கன்னித் தமிழ் இலக்கண வளமுடையது;
மொழி வரலாற்று மாற்றங்களையும் நுட்பங்களையும் உள்ளடக்கியது. கால/பண்பாட்டு, அறிவு வளர்ச்சி,
புதுத் துறை அறிமுகம், சொற்சிதைவு ஆகிய காரணங்களால்
தமிழ்ச் சொற்கள் சிலவற்றின் கருத்தை அறிவதில் இடர்ப்பாடு நேர்வதுண்டு.[ கருதுக: ஆறு] அப்போது பொருண்மையியல் நோக்கில் அணுகின்
பொருள் தெளிவு வாய்ப்பாகும். அந் நிலையில் அவை எனும் சொல்
நோக்கத்தக்கது.
அது + கள்> அவை
என்னும் உயிரீற்றுப் புணர்ச்சியில்,
அது என்னும் ஒன்றன்பால் சேய்மைச் சுட்டுப்பெயருடன் கள் என்கின்ற பன்மை
விகுதி பின்னொட்டாக ஒட்டும்போது, திரிந்து அவை என்று பன்மைச்
சுட்டுப்பெயராக ஆகின்றது. அப்போது,
அது
வருகின்றது
/ அவை வருகின்றன
என்னும்
தொடர்கள் ஆகுகின்றன. அடுத்து, மக்கள், அறிஞோர் கூடுகை
/ அரசவை/ கலையரங்கம்
ஆகியவற்றைச் சூழலுக்கேற்பச் சுட்டுகின்ற ஒன்றன்பால் பெயர்ச் சொல்லாகவும் இயல்கின்றது. அப்போது,
பேரவைக் கூட்டம், அவையல் கிளவி
போன்ற
தொடர்கள் ஆகின்றன. பன்மைச் சுட்டான அவையும் , ஒன்றன்பால் பெயரான அவையும்,
பெயர் என்னும் ஒரே இலக்கண வகையைச் சார்ந்தவையாயினும் சொல்லாக்கத்தில்
மாறுபாட்டவை. அதனால் இவற்றைப் போலி ஒப்புருச் சொற்களாகக் கொண்டு
கருத்துணரலாம். இவற்றுள் ஒன்றன்பால் பெயரான அவை என்பதோடு மட்டுமே கள் என்னும் பன்மை விகுதியைச் சேர்க்கலாம்.
விளக்கவியல் இலக்கணப் பனுவலான தொல்காப்பியத்தில்,
அவை இவை உவை என வரூஉம் பெயரும் ( பெயரியல், நூ. 13 )
அவையல் கிளவி ( எச்சவியல், நூ. 46 )
என்னும் நூற்பாக்களில் முறையே பன்மைச் சுட்டுப்பெயராகவும் ஒன்றன்பால்
பெயராகவும் ‘அவை’ இயல்வது சுட்டப்பட்டுள்ளது. மொழி மரபைப் பின்பற்றும் திருக்குறளில்,
கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை
தரும். ( 658 )
அவையறிநது ஆராய்ந்து சொல்லுக … (711)
என்னும் குறட்பாக்களில் முறையே
பன்மைச் சுட்டுப்பெயராகவும் ஒன்றன்பால் பெயராகவும் ‘அவை’ இயல்வது ஒப்பத்தக்கது.
இவ்வாறாக, ஒப்புருச் சொல்லாக அவை இன்றளவும் வழங்கப்படு- கின்றது. இது தமிழின் இலக்கணக் கட்டுக்கோப்பு
/ மொழி வளப் பெருமையாகும்.
பயன்பட்டவை
தமிழிணையக் கல்விக்கழகத் தரவுகள்.
Comments
Post a Comment