தொல்காப்பியத்திலும்
வள்ளுவத்திலும் ‘மா’ : வழக்குப் பொருண்மை
முனைவர் ப. கொழந்தசாமி, அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி.
உயர்தனிச் செம்மொழியான தமிழில்,
பல்பொருட்சொற்கள், ஒப்புருச் சொற்கள் அனைய பல வகைச்
சொற்பொருண்மை நுட்பங்கள் இயல்கின்றன. அதனால் தொடரில் அமைகின்ற
சூழல் நோக்கி ஒரு சொல்லின் கருத்தை நோக்கவேண்டும். சான்றாக,
மா என்னும் ஓரெழுத்தொருமொழி தொல்காப்பியத்திலும்
திருக்குறளிலும் பல்பொருட்சொல்லாக இயல்வதைக் கருதலாம்.
தொல்காப்பியத்தில் மா
வழக்கு அட்டவணை:
|
நூற்பா
எண் |
சொல்லாட்சி |
கருத்து |
|
224 |
ஆவும் மாவும்
|
விலங்கு ( பெயர் ) |
|
232 |
மாமரக் கிளவி ; மா |
மரம்; விலங்கு (பெயர்) |
|
481 |
வழங்கியல் மாவென் கிளவி |
நிலவளவைப் பெயர் |
|
758 |
மாவென் கிளவி வியங்கோள் அசைச்சொல் |
இடைச்சொல் |
|
1144 |
புள்ளியல் கலிமா |
குதிரை (பெயர்) |
|
1534 |
மாயிரும் தூவி மயில்
|
நீண்ட (பெயரடை ) |
இந்த அட்டவணையால் பெயராகவும்,
பெயரடையாகவும், இடைச்சொல்லாகவும், உரிச்சொல்லாகவும் மா என்னும் ஓரெழுத்தொருமொழி தொல்காப்பிய நடையில்
பயில்வதைத் தெளியலாம். இது தமிழின் சொல் வளத்தை வெளிப்படுத்துகின்றது. மொழி மரபை/ நுடபத்தைப் போற்றுகின்ற வள்ளுவமும், விலங்கு என்னும் பொருளில் ஒன்றன்பால் பெயராக 814ஆம் குறட்பாவிலும், நிறம் என்பதற்குப் பெயரடையாகக் கரிய எனும் பொருளில் 617ஆம் குறளிலும் மாமை என்று 1107ஆம் குறட்பாவிலும்[
இன்றைய வழக்கிலும் மா நிறம் என்று பேசுவதை ஒப்புக]
68, 245, 526, 544, 999, 1058 ஆகிய குறட்பாக்களில் விரிந்துபரந்த என்கின்ற கருத்திலும் மா என்னும்
ஓரெழுத்தொருமொழியைப் பல்பொருட்சொல்லாக ஆண்டுள்ளது. இதனால் தமிழ் மொழி வளத்தைச் செவ்வனே ஈடுபடுத்தித் திருக்குறள் சீரிய மக்கள்
இலக்கியமாக அமைவதைத் தெளியலாம். திருக்குறளால் தமிழுக்குப் பெருமை;
தமிழின் சொல் வழக்கு நுட்பத்தால் வள்ளுவம் வளப்படுகின்றது. இதை உணர்ந்து வள்ளுவத்தை அணுகின் திருக்குறள் வகுத்துரைக்கின்ற விழுமியங்களை
உணர்ந்து கட்டறுத்து ஈடேறலாம்; மானுடம் வெல்லும்.
பயன்பட்டவை
ஜெயதேவன்,
வ.,(பதி.), 2004, தொல்காப்பிய
அகராதி, சென்னைப் பலகலைக்கழகம்.
தமிழிணையக் கல்விக்கழகத் தரவுகள்.
********
Comments
Post a Comment