வள்ளுவத்தில் ‘அ’ – பல்பொருள் தன்மை
முனைவர் ப. கொழந்தசாமி,
அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி.
இலக்கியப்
படைப்பு (வாய்மொழி / எழுத்து ஆகிய) மொழி
வாயிலாக, கருத்து, அழகியல் ஆகிய கூறுகளைக்
கலந்து ஆக்கப்படுகின்றது. அம் மரபில், திருவள்ளுவர்
தனக்கு முந்தைய / தன் காலத்திய மொழி வழக்குகளையும் மரபுகளையும்
போற்றித் தனது படைப்பைச் சிறப்பித்துள்ளார். அவ் வகையில் அ
என்னும் மொழிக் கூறு பலபொருட்சொல்லாக/ ஓரெழுத்தொருமொழியாக
வள்ளுவத்தில் நுட்பமாக ஆளப்பட்டுள்ளமை இவண் விளக்கப்படுகின்றது.
தொல்காப்பியத்தில்
குற்றெழுத்தாகவும், சுட்டுப் பெயராகவும் அசைநிலையாகவும் சாரியையாகவும் ஆறாம் வேற்றுமைப் பன்மை
உருபாகவும் பலவின்பால் வினைமுற்றாகவும் பெயரெச்ச/ வினையெச்ச
/ வியங்கோள் விகுதியாகவும் ஆகாரத்தின் அளபெடைக் குறியீடாகவும் அ
அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. (நோக்குக: ஜெயதேவன், ப.01). இம் மொழி மரபைக்
கைக்கொண்டு வள்ளுவம், 225, 247,
254, 312, 350, 355, 370, 411, 423, 426, 475, 489, 641, 645, 671, 677, 695, 848,
950, 967, 1091, 1187 ஆகிய குறட்பாக்களில் சேய்மைச் சுட்டாக அ என்கின்ற
சொல்லைப் பெய்துள்ளது. சான்றாக,
ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்
; அப்பசியை
மாற்றுவார்
ஆற்றலின் பின் (225)
என்னும் வழக்காற்றைச் சுட்டலாம். அந்த என்பதன் மாற்று வடிவமாக அ விலகியிருக்கின்ற
ஒன்றைச் சுட்டவும் , கூறப்படுகின்ற ஒன்றைத் தொடர்ந்து நினைவூட்டவும்
இயல்கின்றது. அடுத்து,
வாணிகம்
செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.
(120)
பரியினும்
ஆகாவாம் பாலல்ல ; உய்த்துச்
சொரியினும் போகா தம.( 376)
ஆகிய குறட்பாக்களில் தம என்னும், தம்முடையவை என்னும் கருத்திலான சொல்லில் ஆறாம்
வேற்றுமைப் பன்மை உருபாக அ இயன்றுள்ளது. ஆறன்பால (வேற்றுமையியல் நூ.19 ) என்னும் தொல்காப்பிய நடை இங்கு
உன்னத்தக்கது.
அகரத்தில் தொடங்குகின்ற
தொல்காப்பியத்தைப் போன்றே ,அகர முதல எழுத்தெல்லாம்(01 ) என்று தொடங்குகின்ற முதற் குறட்பாவின்
முதற்சொல்லாக, நூலின் தொடக்கமாக அ என்கின்ற உயிர்க் குறில்
எழுத்தைச் சுட்டுவதாக நுட்பமாக நிறுத்தப்பட்டுள்ளமை விதந்து விளம்பத்தக்கது.
இவ்வாறாக, மொழி மரபையும் தொல்காப்பிய நடையையும் பின்பற்றி
அ என்னும் மொழிக் கூறைப் பலபொருட்சொல்லாக/ ஓரெழுத்தொருமொழியாக
ஆண்டு வள்ளுவத்தை வளம் நிறைந்த பேரிலக்கியமாகத் திருவள்ளுவர்
ஆக்கியுள்ளார். வள்ளுவம்
வகுத்துரைக்கின்ற அறவியலோடு, அவரது நடை நலமும் சீரியது;
அறிவுக்கு விருந்தாவது; ஆய்வுக்கு வாய்ப்பாவது.
பயன்பட்டவை
ஜெயதேவன்.வ., 2004, தொல்காப்பிய அகராதி, சென்னைப் பல்கலைக்கழகம்.
http://tamilconcordance.in
Comments
Post a Comment