திருக்குறள் கண்ட ‘தக்கார்’: கருத்தாய்வு
ப. கொழந்தசாமி, அரசினர்
ஆய்வு நிறுவனம், புதுச்சேரி
அற இலக்கியமான திருக்குறள்
மனித வளமைக்கு வழிகாட்டுவதாகும். இதற்காகச் சிறப்புச் சொற்களை
வள்ளுவர் ஆக்கியுள்ளார். இவற்றைத் தெளிந்தால், விழுமியத்தை
அறிந்து படைப்பின் பயனை முழுமையாகப் பெறலாம்; இத்தகைய
அரிய சொற்களுள் ‘தக்கார்’ என்பது ஒன்றாகும்.
இதன் கருத்தை விளக்குவதாக இக் கட்டுரை இயல்கின்றது.
‘தக்கார்’ கருத்துப் பொருள்:
ஒட்டுமொழியான தமிழில் பொருண்மைக் கூறுகளால் சொற்கள் ஆக்கப்படுகின்றன.
இதைப் பகுபத உறுப்புகள் என்று இலக்கணங்கள் சுட்டுகின்றன. சான்றாக, பேசுகின்றான் என்னும்
ஆண்பால் நிகழ்காலப் படர்க்கை வினைமுற்று, பேசு+ கிறு+ ஆன் [ என்ன + எப்போது+ யார்] என்னும் மூன்று பொருணமைக் கூறுகளை,
தமிழின் இலக்கண / பொருண்மை அமைப்புப்படி ஒட்டி ஆக்கப்பட்டதாகும். இவ்வாறு அடிச்சொல்லுடன்
சேர்த்துச் சொற்கள் ஆக்கப்படுகின்றன. தக்கார் என்பது தகு என்னும் பகுதியுடன் ஆர் விகுதி
புணர்த்து[ தகு > தக்கு + ஆர்] ஆக்கப்படுகின்றது. தகுதி, தகைமை ஆகியன இதனோடு பொருள்
தொடர்புடையன. திருக்குறளில்,
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும் (114)
தக்கார் இனத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில் ( 446)
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு ( 731 )
போன்றவாறு,
அற்நெறியாளரை/ பெருமைக்குரியவரை/ போற்றத்தக்கவரை அடையாளங் காட்ட ‘தக்கார்’ என்னும் சொல் ஆளப்படுகின்றது. பிறப்புக்கும் இறப்புக்கும்
இடையிலான காலகட்ட உலக வாழ்க்கையில் உணர்ச்சியைப் பக்குவப்படுத்தி, அறிவை முன்னிறுத்தி
, அறிவியல் மனப்பான்மையுடன் வாழ்ந்தால்/ செயலாற்றினால் சீர்மை மிகும். இத்தகைய சீராளரை ‘தக்கார்’
என்னும் பெயரால் திருவள்ளுவர் சிறப்பிக்கின்றார். இச் சொல் இந்தப் பொருளில் சங்க
இலக்கியங்களிலும் பயில்வது ஒப்புநோக்கத்தக்கது. தக்காராக வாழ்ந்து, தக்காரைப் பேணி,
தக்காரை உருவாக்கினால் உலகம் வளமுற்று மானுடம் வெல்லும்.
********
Comments
Post a Comment