கொங்கு வழக்கில் கொடி/ ஒறம்பரெ
முனைவர்
ப.
கொழந்தசாமி, அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி.
தொல்காப்பிய
எச்சவியலின் முதல் நூற்பா,
தமிழ் மொழியின் பன்முகத் தன்மையை/ வட்டார வழக்கை,
இயற்சொல்
திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே
என்று சொற்பிறப்பியல்
நோக்கில் சுட்டுகின்றது. இதனால்
பழங்காலத்திலிருந்தே பொதுத் தமிழும் வட்டார வழக்குகளும் இயல்வது தெளிவு. இந்தப் போக்கு இன்று வரை தொடர்ந்து, தமிழின்
சொற்களஞ்சியம் விரிவடைந்து, பொருண்மை ஆய்வுக்கு இலக்காகி,
வட்டார வழக்குச் சொற்களின் பொருண்மையை அறிவது தேவையாகின்றது.
இக் கட்டுரை கொடி என்னும் பழம்பொதுச் சொல் கொங்கு
வட்டாரத்தில் பொது வழக்குடன் கூடுதலாகத் தங்கத் தாலி என்னும்
சிறப்புப் பொருளில் ஆளப்படுவதை எடுத்துரைப்பதாக இயல்கின்றது.
கொடி : சொற்பொருள் :
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, கொடி என்னும் ஒன்றன்பால் பெயருக்கு,
படர் கொடி, ஆடை
உலர்த்துங்கொடி, கொப்பூழ் கொடி, மகளிர் கழுத்தணி, அரைஞாண் கொடி, சிறு கிளை வாய்க்கால், துணிக் கொடி (இரண்டாம்
மடலம்; மூன்றாம் பாகம், பக்.158,159 ),
போன்ற பொருளைத் தருகின்றது. சென்னைப் பல்கலைகழகத் தமிழ்ப் பேரகராதியும் இவ்வாறு சுட்டுகின்றது.
தாலிக்கொடிக்குத் தங்கம் வாங்கப் போகின்றோம் என்பதைக் கொங்கு நாட்டில்,
கொடிக்குப் பவுனு வாங்க நகக்
கடைக்கிப் போறொ
என்று
பேசுகின்றனர்.
இதில் கொடி என்பது தங்கத்தாலான தாலிக் கொடியைக்
குறிக்கின்றது. மஞ்சள் தடவிய கயிற்றாலான தாலியைத் தாலிக்
கயிறு என்று சுட்டுகின்றனர்.
இவ்வாறே
உறவின்முறை என்பதை ஒறம்பரெ என்று ஆள்கின்றனர்.
எங்க வூட்டுக்கு இன்னக்கி ஒறம்பரெ வாராங்க
என்று பேசுகின்றனர். இத்தகைய கொங்கு வட்டாரச் சொற்களை அறிந்தால் மொழி
வளமும் புரிதிறனும் பண்பாட்டு மேன்மையும் சமூக ஒற்றுமையும் வசப்படும்.
பயன்பட்டது
தமிழ்
இணையக் கல்விக் கழக மின்னூலகம்
கட்டுரையாளர் கொங்கு நாட்டினர்
**********
Comments
Post a Comment