சேனாவரையரின் தொடர்ப் பொருண்மை விளக்கம்

பேராசிரியர் குழந்தைசாமி, புதுச்சேரி.

            தமிழ் இலக்கண, இலக்கிய, சித்தாந்தத் தளங்களில் மூல நூல்களுக்கு நிகரான அறிவாக்க / கொள்கை விளக்கப் பங்களிப்பை உரைகள் நல்குகின்றன. உரைத் தோற்றத்தின் தொன்மையைத் தொல்காப்பிய மரபியலால் அறியலாம்..  கருத்துரை, விளக்கவுரை என்று உரைகள் பல நிலைகளில் / நோக்கங்களில் ஆக்கப்படுகின்றன. அடுத்த தலைமுறைகளுக்கு அறிவைக் கடத்துகின்ற/ பரப்புகின்ற/ நூலைக் காக்கின்ற/ மரபைப் போற்றுகின்ற நற்சேவையை உரைகள் ஆற்றுகின்றன. அதனால் உரைகளின் தகைமையை வெளிப்படுத்தி ஆய்வுகள் நிகழ்த்தப்படுகின்றன. தொல்காப்பிய உரைகளுள் தி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் சொல்லதிகாரத்திற்குச் சேனாவரையர் எழுதிய நுட்பவிரிவுரை குறிப்பிடத்தக்கதாகும்; பொருண்மையியல் ஆய்வுக்குக் கருத்தளிப்பதாகும்.

தொடர்ப் பொருண்மை :

            தமிழ்ப் பொருண்மையியல் கொள்கைகள் தொல்காப்பியத்தில் ஆங்காங்கு வெளிப்படையாகவும், ஒவ்வொரு நூற்பாவிலும் குறிப்பாகவும் சுட்டப்பட்டுள்ளன. அவ்வாறே உரைகளும் பொருண்மையியல் கொள்கைகளை விண்டுரைக்கின்றன. மொழி ஆய்வின் அடைப்படையாக அமைவது தொடர் ஆகும். சொற்கள் இலக்கண மரபுப்படி, பொருண்மைத் தகைமையுடன் இணைந்து தொடர்கள் ஆக்கப்பட, எழுத்துகளின் முறையான சேர்க்கையால் சொற்கள் இயல்கின்றன. அதனால் எழுத்துகள் சொற்பொருளையும், சொற்கள் தொடர்ப் பொருளையும் ஆக்குகின்றன. எனவே சொற்பொருள், தொடர்ப் பொருள் என்னும் பாகுபாடு ஏற்படுகின்றது.

சேனாவரையர் விளக்கம்:

            சொல்லதிகார முன்னுரையில்,           சொல்லாவது எழுத்து இணைந்து  பொருள் குறித்துவருவது என்று சொற்பொருண்மையைச் சுட்டிய சேனாவரையர், சொற்களைத் தனி மொழி, தொடர் என்று இரண்டு வகைப்படுத்தி,

Ø  தனிமொழி இடுகுறியாகவோ, காரணப் பெயராகவோ மரபுப்படி இயங்கும் என்று சுட்டுகின்றார்.  சான்று: பூ, பூண், பூண்டி…….

Ø  தொடர்ப் பொருண்மை,

     அ)  அவாய்நிலை [ சொற்கள் மரபுப்படி ஒன்றையொன்று தொடர்தல்]

     ஆ)  தகுதி [ எச் சொல்லோடு எந்தச் சொல் சேரும் என்னும் பொருத்தம் ]

      இ ) அண்மை [சொற்களைச் சேர்த்தும் பிரித்தும் இணைத்தல்]

தனிச்சொல்லைவிடவும் ஒரு தொடரின் உறுப்புச் சொல் தெளிவாக விளங்கும். நடு என்பது இடைநிலை என்று பெயராகவும் , மண்ணுக்குள் புதை என்று வினையாகவும் இயல்வதால், தொடர்ச் சூழலைக் கொண்டு பொருள் தெளியலாம் என்பதை அவாய்நிலை குறிக்கின்றது.

சொல் வழக்கு வரையறையால் இந்தச் சொல்லுடன் இது ஒட்டும் என்னும் மரபு [ தகுதி] உள்ளது. காகிதத்தைக் கிழி; நகத்தை வெட்டு; குச்சியை முறி என்று ஆளலாம். அணமையுறுப்பு என்று இதை இக்காலத் தொடராய்வில் சுட்டுவர். தொல்காப்பிய மரபியல் வகுத்துரைக்கின்ற ஆண்பால், பெண்பால், இளமைப் பெயர்கள் இம் மரபின.

தொடரில் அமைகின்ற சுடுசோறு போன்ற கூட்டுச் சொற்களைப் பிரித்து எழுதக்கூடாது; பிரிப்பின் பொருட் குழப்பம் நேரலாம். இப் பண்பை அண்மை என்று குறிக்கின்றார்.

இவ்வாறு சேனாவரையர் தனி மொழி, தொடர் என்னும் மொழிக் கூறுகள் பொருண்மை சுட்டுவதை நுட்பமாக விளக்கியுள்ளார். அறிவுக் களஞ் சியங்களான உரைகளால் மூல நூலின் கொள்கைகளையும்  மொழி மரபுகளையும் தெளியலாம்.   

பயன்பட்டது:https://www.tamildigitallibrary.in/ தொல்காப்பியம்+-+சொல்லதிகாரம்+ சேனாவரையம்#book1/                                 ******

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு