தொல்காப்பியத்திலும் திருக்குறளிலும் ஒண்மை’ – கருத்துப் பொருண்மை

பேராசிரியர் குழந்தைசாமி, புதுச்சேரி.

உயிர்களின் கருத்தாடல் கருவியான மொழி, எழுத்து/ ஒலி போன்ற அமைப்புகளால் ஆன நுண்ணமைப்பை உடையதாகும்; மானுட மொழி மேலும் செறிவானது. .  அணுத்திரள் கோட்பாட்டின்படி மொழிக் கூறுகள் இயங்கு கின்றனஅதனால் கருத்தை முறையாகவும் தெளிவாகவும் அறிய மொழிக் கூறுகள் ஒவ்வொன்றின் இயல்பையும் புரிந்துகொள்ளவேண்டும். கருத்தாக்கம் உணவாக்குவது, கட்டடம் கட்டுவது போன்றதே. எதை? எதற்காக ? எவ்வளவு ? எப்படி? என்பன இவற்றில் அடிப்படையானவையாகும். மொழிப் பொருண்மையில், சூழலுக்கேற்பச் சொற்களின் பொருண்மை அமைவதால் தொடரைக் கொண்டே சொல்லின் கருத்தை அறியவேண்டும். குறையற்ற அனைவரும் இயற்கையாகவும் பெற்றோர் அளித்த அறிவுக் கொடையாலும், போலச் செய்தலால் அறிந்தும் கற்றும் கேட்டல், பேசல், படித்தல், எழுதல், கருத்தாக்கம் ஆகிய மொழித் திறன்களைப் பெறுகின்றனர். இம் மொழித் திறன்கள் அவரவர் முயற்சிகளுக்கேற்ப மென்மேலும் வளர்ந்து வலுப்பெறுகின்றதுஇதற்கு அகராதிகள் துணையாகின்றன. அதோடு சொல்லாட்சி மரபை அறிதல் நல்வாய்ப்பாகக் கூடும். அம் முறையில் தொல்காப்பியத்திலும் திருக்குறளிலும்ஒண்மைஎன்னும் பெயர்ச் சொல் வழங்குமாற்றை வரலாற்று நோக்கில் இக் குறிப்புரை எடுத்துரைக்கின்றது.

ஒண்மை:

            ஒள்+மை > ஒண்மை. ஒளி, விளக்கம், ஒளிர்வு, நுட்பமான அறிவுடைமை ஆகியன இந்தப் பொருட்களத்தில் அடங்குவன. அதாவது ஒன்றின் சிறந்த நிலையைக் குறிப்பது.

தொல்காப்பியத்தில்:

நுண்மையொடு புணர்ந்த ஒண்மைத்தாகி ( நூற்பா 1600 அடி 04 )

என்று  நூற்பாவின் இலக்கணத்தை விளக்குகின்ற மரபியல் நூற்பாவில் இயல்கின்றது. நுட்பமும் மேன்மையும் கொண்டதாக நூற்பா அமைக்கப்படவேண்டும் என்று, ஒண்மை  சீரிய; மேன்மையான என்னும் பொருளில் ஆளப்படுகின்றது.

            புறஞ்சொல் கேளாப் புரைதீர் ஒண்மை ( பதிற்றுப்பத்து,பா. 70 அடி13)

                                             ( http://tamilconcordance.in/SANG-14A.html#70 )

 

என்னும் பதிற்றுப்பத்து அடியிலும் தெளிந்த சீரிய அறிவைச் சுட்ட இச் சொல் இயல்கின்றது.

திருக்குறளில்:

        மொழிப் பொருண்மை மரபைப் போற்றுவதோடு, புதுமையையும் புகுத்திய திருவள்ளுவர்,

வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு (844)

என்று, உயர்வை / அறிவுடைமையைக் குறிக்க,  ஒண்மையை ஆண்டுள்ளார்; இதற்கு எதிர்ச்சொல்லாக வெண்மை இயல்கின்றது, (  (ஒண்மை

            இதனால் தொல்பழங் காலந்தொட்டு ஒண்மை , ஒன்றின் சிறப்பை உணர்த்துவதாக, திறனைப் போற்றுவதாக வழங்குவதைத் தெளியலாம். இத்தகைய பொருண்மை அறிவு கருத்தைத் தெளிய நல்வாய்ப்பாகும்.

                                        *******

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு