தொல்காப்பியத்தில் ‘சீர்’- கருத்துப் பொருண்மை
பேராசிரியர்
ப. குழந்தைசாமி, புதுச்சேரி
உயர்தனிச் செம்மொழியான தமிழ், சொல் வளமும் கருத்துச் செறிவும்
கொண்டதாகும். ஒரு சொல்லுக்கு அகராதிப் பொருளும் சூழலுக்கேற்ற கருத்தும் அமைவதுண்டு.
சான்றாக, சீர் என்பது பெயராக இயல்கையில்
சிறப்பு, பெருமை, சடங்கு, ஒழுங்கமைவு என்னும் பொருளையும் , செயப்படுபொருள்குன்றிய
வினையாகப் பயிலும்போது வாய்த்தல், சிறத்தல் ஆகிய பொருளிலும் இயல்வதால், தொடர்ச்
சூழல் நோக்கிக் கருத்துணரலாம். இந்தப் பொருண்மைப் பின்னணியில் தொல்காப்பியத்தில் இயல்கின்ற
’சீர்’ என்னும் சொல்லின் ஒப்புப்பொருள் தன்மையினை அணுகலாம்.
சீர்சால் வேந்தன்…….(நூற்பா1010 அடி12 ) = தலைமை / சிறப்பு
சீர்த்தகு மரபில் பெரும்படை….…….(நூற்பா1010
அடி20 ) = மிகுதி
மூவசை புணர்த்து …..சீர் எனப்படுமே (நூற்பா1273
அடி02 ) =
அசைகளாலான
செய்யுள் உறுப்பு
இங்ஙனம் தொல்காப்பியத்தில்
தலைமை ; மிகுதி; அசைகளாலான செய்யுள் உறுப்பு என்னும் கருத்தில் பெயராக
/ ஒப்புருச் சொல்லாக ‘சீர்’ இயல்வதை அறிந்து, தொடர்ச் சூழல் நோக்கிக் கருத்துணரலாம்.
இத்தகைய பொருண்மை அணுகுமுறையால் விளம்பப்படுகின்ற இலக்கணக் கொள்கையைத் தெளியலாம். அப்போது
இலக்கணத் தெளிவு வாய்ப்பதோடு கடினத் தன்மை நீங்கும்; மென்மேலும் அறிகின்ற ஆர்வம் உண்டாகும்.
பயன்பட்டது
வ. ஜெயதேவன்(பதி.),
2004, தொல்காப்பிய அகராதி, சென்னைப் பல்கலைக்கழகம்.
**********
Comments
Post a Comment