பொறாமைசொற்கூற்றாய்வு

பேராசிரியர் குழந்தைசாமி, புதுச்சேரி

 

            ஒட்டுமொழியான தமிழில் பொருண்மைக் கூறுகளை மரபுப்படி இணைத்துச் சொற்கள் ஆக்கப்படுகின்றன. சான்று: முருகு +அன் >முருகன்; பேசு+கிறு+ ஏன்> பேசுகிறேன். இதை இலக்கணம் பகுபதவுறுப்புகள் என்றும் பொருண்மைக் கூறுகள் என்று பொருண்மையியலும் இலக்கணப்படுத் துகின்றன. சான்றாக ஆடுகின்றாள் என்னும் பெண்பால் படர்க்கை வினைமுற்றில் செயல்+ காலம்+ செய்பவள்  என்னும் மூன்று பொருண்மைக் கூறுகள் அடங்கியுள்ளன. இவற்றில் எந்தக் கூறு மாற்றப்படுகின்றதோ, அது குறிக்கின்ற பொருண்மை மட்டும் மாறும். [ ஆடுகின்றான்; ஆடுகின்றன ] இம் முறையில் பொறாமை என்னும் பிறழ் உளவியல் முப் பொருட்கூற்றுக் கலைச்சொல்லை அணுகலாம்.

பொறாமை:

            மனிதன் அறிவாலும் எண்ணங்களாலும் இயக்கப்படுகின்றான். இதனால் முறையே உள்ளத் தெளிவும் குழப்பமும் ஏற்படுகின்றன. அனுபவம், எதிர்பார்ப்பு, ஒப்பீடு, தன்னம்பிக்கைக் குறைபாடு ஆகியவற்றால், பிறருடைய ஆக்கத்தை ஏற்றுக்கொள்ள இயலாத தவிர்ப்பு மனநிலை பொறாமை அல்லது ஆற்றாமை எனப்படுகின்றது. இவை பொறு+ ஆ + மை; ஆற்று+ ஆ + மை என்னும் மூன்று பொருட்கூறுகளால் ஆன கூட்டுச் சொற்களாகும். இம் மூன்று கூறுகளுள்,

Ø  பொறு/ ஆற்று என்னும் வினைப்பகுதி ஏற்றுக்கொள் என்றும்

Ø  என்னும் எதிர்மறை இடைநிலை இயலாமை எனவும்

Ø  மை என்னும் பண்புப்பெயர் விகுதி பெற்றிருத்தல்

என்றும் பொருள் சுட்டுகின்றன. இம் மூன்றையும் இணைத்துப் பொறாமை/ ஆற்றாமை என்னும், பொறுக்க / ஒப்ப இயலாமை என்னும் கருத்திலான பண்புப் பெயர்கள் ஆக்கப்படுகின்றன. இவ்வாறே கல்லாமை, கள்ளாமை, இயலாமை போல்வன இயல்கின்றன. மேலும் இத்தகைய ‘ஆமை’கள் விலக்கப்படவேண்டிய பிறழ் எண்ணங்களாகும். இங்ஙனம் சொற்களின் பொருண்மைக் கூறுகளைப் பிரித்தறியின் சொற்பொருள் தெளிவாகும்.  இவண்,  ’பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்’

 என்னும் நல்லந்துவனார் பாடிய நெய்தற்கலி 16ஆம் பாவின் 14ஆம் அடி ஒப்பத்தக்கது.

                                                                      ******

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு