புறநானூற்றின் தாக்கமுற்ற குறள்

பேராசிரியர் குழந்தைசாமி, புதுச்சேரி

மானுட மேன்மைக்காகப் படைக்கப்படுகின்ற இலக்கியங்கள் தனி மனித, சமூக, அரசியல், ஆட்சியியல் சான்ற விழுமியங்களை நிலைபேறுடைய மானிட மதிப்புகளாக விண்டுரைக்கின்றன; முடியாட்சிக்குக் கூறப்பட்டவை குடியாட்சிக்கும் பொருந்துவன. இத்தகைய புறநானூற்றுப் பாடல் வருமாறு:

காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே,
மாநிறைவு இல்லதும், பன்நாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே,
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே,

கோடி யாத்து, நாடுபெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம்போலத்,

தானும் உண்ணான், உலகமும் கெடுமே. (184)

           

மக்களை வாட்டி வரி வாங்கிய பாண்டிய மன்னனை, விளைநிலத்தில் புக்க யானை போலச் செய்யாதே என்று பிசிராந்தையார் எச்சரித்த அரசு வரியியல் குறித்த இப் பாடலின் தாக்கம் பெற்றதாக,

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
          புல்லார் புரள விடல் (755 )

என்னும் குறட்பா இயல்கின்றது. திருவள்ளுவர் தனக்குக் கிடைத்த அறவியல் தரவுகளை எடுத்துரைத்து நூல் யாத்தமை போற்றத்தக்கது. இந்தக் குறட்பாவிலுள்ள ஒடு, உம் என்னும் இடைச்சொற்கள் ஊன்றி உன்னத்தக்கன. புல்லாது என்னும் வினையெச்சம் முற்றெச்சமாக இயன்று, கருத்தை அழுத்தமாக வலியுறுத்துகின்றது. இறைவனாக விளங்கி, அளவறிந்து வரி விதித்து, மக்களை வினைஞர்களாக, திறனாளர்களாக, அரசுப் பற்றாளர்களாக ஊக்குவதாக ஆட்சி அமையவேண்டும். மக்களை உள்ளடக்கிய, மக்களின் வளர்ச்சியை மையமிட்ட ஆட்சி சிறப்பானதாக அமையும்போது அரசும் புகழ்பெறும்: மக்களும் சிறப்படைவர். இவ் அறவியலை / புறநானூற்றை வள்ளுவம் வழிமொழிந்துள்ளது.

நன்றி: தேவநேயப் பாவாணர் உரை- https://www.valaitamil.com/arulotum-anpotum-vaaraap-porulaakkam-pullaar-purala-vital-kural-755.html

                                                                             ---------------

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு