திருக்குறளில் தா’ – பொருட்பன்மை

புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

மொழி / பொருண்மைத் தொழில்நுட்பத்துடன் செறிவாகப் படைக்கப்பட்டுள்ள திருக்குறளின் ஒவ்வொரு சொல்லையும் நோக்கித் தெளியவேண்டும். அந் நிலையில் பழந்தமிழ்ச் சொல்லான ’தா’ வள்ளுவத்தில் பண்புப் பெயராகவும் வினையாகவும் பயில்வதை எடுத்துரைப்பதாக இக் குறிப்புரை இயல்கின்றது.

தா :

            தொல்காப்பிய உரியியல் 827ஆம் நூற்பா உரையில் தமிழண்ணல், தா என்பதற்குக் குற்றம் என்றும் பொருளுண்டு என்று சுட்டியுள்ளார். அதோடு கொடு என்னும் கருத்தில் வினையாகவும் இச் சொல் வழங்கப்படுகின்றது.

வள்ளுவத்தில் :

    மொழி மரபைப் போற்றுகின்ற வள்ளுவத்தில்,

இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தா
வில் விளக்கம் தரும் (853)

என்னும் குறட்பாவில் பிறழ் உணர்ச்சியான மாறுபாட்டைக் கைக்கொள்ளாவிட்டால் நீங்காத புகழ் உண்டாகும் என்று அறமுரைக்க, தா என்னும் உரிச்சொல்லடியாகத் தோன்றிய பண்புப் பெயரை ஆண்டுள்ளார். இதிலுள்ள தாவில் விளக்கம் என்னும் சொற்கூட்டு , குறையாத புகழ் என்னும் பொருளது. அடுத்து,

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினிய தில் (1065)

என்று கொடு என்னும் கருத்தில் வினையாக அமைத்துள்ளார். 

இதனால் பண்புப் பெயராகவும், செயப்படுபொருள்குன்றா வினையாகவும் ’தா’ வேறுபட்ட பொருளில் வள்ளுவத்தில் பயில்வது தெளிவு. இவ்வாறு ஒவ்வொரு சொல்லின் கருத்தையும் நோக்கி அறியின் இலக்கியப் பயன் வாய்ப்பாகும்.

நன்றி:  இணையத் தரவுகள்

              தமிழண்ணல் ( உரை.),2008, தொல்காப்பியம்- கருத்துரை,

                                                    மதுரை: மீனாட்சி புத்தக நிலையம்

                                ******

Comments