தன்மதிப்பைப் பேணுகதிருக்குறள் விழுமியம்  (Raise Self-esteem)

பேராசிரியர் புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

மானுட மேன்மைக்காக ஆக்கப்படுள்ள வள்ளுவம் தனி மனித மேன்மையைத் தலைசிறந்த ஆளுமைப் பண்பாக மதிப்பிடுகின்றதுஅதன்படி ஒவ்வொருவரும் தன்னைப் பற்றி ஆக்கப்பூர்வமான மதிப்பீட்டை ஏற்படுத்திக்கொண்டால் நற்பேறுகள் விளையும். இப் பொருண்மையில் அமைந்துள்ள குறட்பாக்கள் சிலவற்றை விளக்குவதாக இக் குறிப்புரை இயல்கின்றது.

கவலை ( குறட்பா 07 ) ஒரு பிறழ் மனநிலையாகும். எதிர்பார்ப்பு நிறை வேறாதபோது கவலை உண்டாகி, நான் வல்லமை அற்றவன் என்னும் எதிர்மதிப்பீடு  ஏற்பட்டுத் தன்மதிப்புக் குறைகின்றது. இப் பிறழ் மனநிலையைத் தவிர்க்க / எதிர்கொள்ள இறை அல்லது ஆன்றோர் பற்று உறுதுணையாகும். அடுத்து, விரும்பாத சூழலை முறியடிக்க,

இடுக்கண் வருங்கால் நகுக; அதனை
அடுத்தூர்வது அஃதொப்பது இல் (621)

என்னும்  குறள் வாய்ப்பாகின்றது. வாழ்க்கையில் சிக்கல் ஏற்படுவது இயல்பு ; அதை முறியடிக்கலாம் என்னும் ஆக்க மனநிலை தேவை ; எந் நிலையிலும் தன்மதிப்பை இழந்து வெறுப்பை வளர்க்கலாகாது. அடுத்து,

தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால் ( 209 )

என்று தீய எண்ணங்களுக்கு வாய்ப்பளிக்காவிட்டால் தன்மதிப்பு உயரும் என்னும் சமூக உளவியல் கொள்கையை அறிவுறுத்துகின்றார். தொடர்ந்து, 293ஆம் குறட்பாவில்  மனச்சான்றுப்படி உண்மை பேசவேண்டும்; பொய் சொன்னால் தன்மதிப்புக் குறைந்துவிடும் என்று எச்சரிக்கின்றார். இதே போல், 31ஆம் அதிகாரத்தில் சினக்கவேண்டாம் ; சினம் உயிர்க்கொல்லி ; இது தன்மதிப்பைக் குறைந்துவிடும் என்னும் உளவியல் கொள்கைகளை வகுத்துரைக்கின்றார். தொடர்ந்து,

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை (439 )

என்று தற்பெருமை கொள்ளாதே; மிகையான தற்புகழ்ச்சிகூடாது என்று எச்சரித்து, நற்பயன் விளைவிக்காததைச் செய்யாதே என்று வலியுறுத்துகின்றார். அடுத்து 974ஆம் குறட்பாவில் தற்காப்பு; அறிவியல் மனப்பான்மை ஆகியவற்றை வலியுறுத்தி, அடுத்து, பணிக; மிகையாக உன்னை வியவற்க என

பணியுமாம் என்றும் பெருமை; சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து ( 978 )

என்னும்  சமூக உளவியல் கொள்கைகளை வற்புறுத்துகின்றார். இவ்வாறு நூல் நெடுகிலும் தன்மதிப்பைக் குறைக்கின்ற கவலை, தீவினை விருப்பம், சினம் ஆகிய எண்ணங்களையும்; தன்னை வியத்தல், பணிவின்மை ஆகிய செயல்பாடுகளையும் சுட்டி எச்சரித்து, தன்மதிப்பைப் பேணுகின்ற வாய்ப்புகளையும் அடையாளப்படுத்தியுள்ளார். வள்ளுவத்தின் நோக்கம் நிறைவான வளர்ச்சியை ஒவ்வொரு மனிதனும் வாய்ப்பாக்கவேண்டும் என்பதாகும். அதற்குத் தன்னைக் காதலிக்கின்ற வாழ்க்கைக் கலையைப் பின்பற்றி, அறிவியல் மனப்பான்மையுடன் செயலாற்றலாம்.

நன்றி: இணையத் தரவுகள்                      *******

 

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு