திருக்குறளில் ‘அற்கா’ × ‘ அற்குப’ – முரண்மை
புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
மனித எண்ணங்களும் வாழ்வியலும் ஏற்றத்தாழ்வுடையவை;
மாறுபடக் கூடியவை. அதனால் வாய்க்கும்போதெல்லாம் அறச்செயல்களை உடனுக்குடன் செய்துவிடவேண்டும்
என்று அற இலக்கியங்கள் வலியுறுத்துகின்றன. இந் நிலையில்,
அற்கா இயல்பிற்றுச் செல்வம்; அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல் (333)
என்னும் குறட்பா
உன்னத்தக்கது. இக் குறட்பாவில், செல்வம் நிலையற்றது;
அதனால் உள்ளதைக் கொண்டு உடனுக்குடன் நலம்புரிக என்னும் இரண்டு தொடர்கள் அமைந்துள்ளன.
இயல்பால் நிலையற்றதைச் செயலால் நிலைநிறுத்துக
என்னும் முரண்மை செல்வத்தின் நிலையாமையைத் தெளிவித்து, நன்மை வளர வலியுறுத்துகின்றது.
அல்குதல் என்பதற்குத் தங்குதல் / நிலைபெறுதல்
என்று பொருள்; ஓசையினிமை நோக்கி அற்கா, அற்குப என்று குறளில் இடையினம் வல்லினமாகத் திரிந்தது. பொருள் சேர்தலின் அருமை பெற்றால் என்னும் வினையெச்சத்தால் உணர்த்தப்படுகின்றது;
ஆங்கே என்னும் சேய்மை
இடப்பெயரால் தள்ளிப்போடாமல்
உடனுக்குடன் நலம்புரிக என்னும் கருத்து வலியுறுத்தலாகின்றது. பொதுவாக, எந்தவொரு செல்வத்தையும் அடைந்தோர்
அதைச் சேமிக்க விழைவர். தேவைப்படும்போது / வாய்க்கும்போது அறம் செய்யலாம் என்று தள்ளிப்போடுவர்.
ஆனால் சேமித்த பொருள் அறம் செய விரும்பும்போது வாய்க்குமா? / குடும்பத்தார் அனுமதிப்பார்களா?
இடையில் வேறு தேவை ஏற்படுமா? என்று ஆராயவேண்டும். இவற்றைத் தெளிந்து நலம்புரிக என்று நிலைபேற்றின் முரணை இக் குறட்பா எடுத்துரைக்கின்றது.
நன்றி: இணையத் தரவுகள் ******
Comments
Post a Comment