அண்நா – தொடர்ப் பொருண்மை
புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
பத்துப்பாட்டில் ஆற்றுப்படை இலக்கியமான
முடத்தாமக்
கண்ணியார் இயற்றிய பொருநராற்றுப்படை விவரிப்பு இலக்கியமாகத் திகழ்கின்றது. தலையிலிருந்து கால் வரை பாடினியின் அழகு இனிய உவமைகளால் விவரிக்கப்பட்டுள்ளது. கரிகாலனின் விருந்தோம்பல் பண்பு, காவிரியின் சிறப்பு, சோழ நாட்டு வளம், பண்ட மாற்று வணிகம், சோழ
நாட்டு நிலங்கள்
ஆகியவற்றையும் விவரித்துள்ளார். இவற்றோடு
பாலை யாழின் வருணனையும் விரிவாக இடம்பெறுகின்றது. இதைப் படிப்பாருக்கு யாழின் அமைப்பு
உளத்தே நிழலாடும். அதில்,
எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி
அண்நா இல்லா அமைவரு வறுவாய் (அடிகள் 11-12)
என்று எட்டாவது நாள் நிலவு போலும்
வடிவை உடைய உள் நாக்கு இல்லாத, உள்ளே
ஒன்றும் இல்லாத வாயினையுடைய யாழ் என்று உவமையுடன் உருக்காட்சிப்படுத்தியுள்ளார்.
இதில் அண்நா [ அண்ணத்தின் மேலுள்ள உள் நாக்கு ] என்பது ஏழாம் வேற்றுமை உருபும்
பயனும் உடன்தொக்க தொகை. அண்நா இல்லா என்னும் தொடர் உள்ளே ஒன்றுமில்லாத வெற்றிடமாக
இருக்கின்ற பத்தலின் அமைப்பு நிலையைக் குறிக்கின்றது. யாழ் குறித்துச் சங்கச்
சோலை ( http://sangacholai.in/Essays-4A.2.html
), சுட்டுவதாவது:
யாழ் என்பது ஒரு நரம்பிசைக் கருவி.அதன் உருவத்தைப் பொருத்து
அதிலுள்ள நரம்புகளின் எண்ணிக்கை வேறுபடும். பேரியாழ் (21 நரம்புகள்),
மகரயாழ் (19 நரம்புகள்), சகோட யாழ் (14 நரம்புகள்), செங்கோட்டு
யாழ் (7 நரம்புகள்) என. மேலும் இந்த யாழை வாசிக்கும் மக்கள்
வாழும் நிலப்பகுதியின் பெயராலும் குறிஞ்சி யாழ் பாலை யாழ் எனப்படும். யாழின்
உறுப்புகளாகப் புலவர் இங்கே குறிப்பிடுவன: பத்தல், தோல்,
போர்வை, ஆணி, தண்டு,
வார்க்கட்டு.
நன்றி: இணையத் தரவுகள் ------------
Comments
Post a Comment