உப் பக்கம் – சுட்டுப் பொருண்மை நீட்சி
புதுவை
குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
தொடரியல்
நோக்கில் இ, உ, அ ஆகிய மூன்று குற்றுயிர்களும்
சுட்டு எழுத்துகள் எனப்படுகின்றன. இவை அக / புறச் சுட்டுகளாக இயல்கின்றன. ஒருவரை
/ ஒன்றைச் சுட்டிக்காட்டி விளக்க இவை பயன்படுகின்றன. இவற்றுள் ஒன்று மற்ற இரண்டுக்கும்
எதிர்ப் பொருளில் இயலும். இவ்வாறு சுட்டும்போது சுட்டுவார்க்கும் சுட்டப்படுகின்ற பொருளுக்கும்
இடையில் உள்ள இட அமைவை/ தூரத்தைக் கருதிச் சுட்டெழுத்துகள்,
அண்மை = அருகிலுள்ள – இக் கட்டடம்
நடுமை
/ பின்புறம் = சற்றுத் தொலைவிலுள்ள – உவ் இடம் ; பின்னால்- உப் பக்கம்
சேய்மை = தூரத்திலுள்ள- அம் மரம்
என்று அமைந்துள்ளன.
இம் மூன்றுள் உ சிறப்புப் பொருண்மை நீட்சி கொண்டதாகும். இதைக் கீழ்வருகின்ற
இலக்கிய வழக்குகளால் தெளியலாம்.
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர் ( 620 )
என்னும் குறட்பாவில்
பின்புறம் / புறமுதுகு என்னும் கருத்தில், மேலும் பொருள் நீட்சி பெற்று மரபுத்தொடராக ‘தோற்கடிப்பர் ‘ என்னும் கருத்தில் இயல்கின்றது. இது வள்ளுவ நடைச் சீர்மையாகும். அடுத்து,
நான்மணிக்கடிகை,
கற்பக் கழிமடம் அஃகும்; மடம் அஃகப்
புற்கந்தீர்ந்து இவ்வுலகின் கோளுணரும் ; கோளுணர்ந்தால்
தத்துவ மான நெறிபடரும் ; அந்நெறி
இப் பால் உலகின் இசைநிறீஇ – உப்
பால்
உயர்ந்த உலகம் புகும் [பா, 27]
என்னும் பாடலில் இ அண்மைச் சுட்டாக, பொருள்
நீட்சியால் இவ் உலக வாழ்க்கையையும், உ சேய்மைச் சுட்டாக,
பொருள் நீட்சியுற்று மேலுலக முத்தியையும் தொன்மப் பின்னணியில்
சுட்டுகின்றது. இது சொற்பொருள் வரலாற்றுச் சிறப்பாகும். ஐந்தடிப் பஃறொடை வெண்பாவாலான
இந்த நான்மணிக்கடிகைப் பாடலில் காரணகாரிய முறையில் அறக் கருத்துகள் அடுக்கப்பட்டுள்ளதால்
இதில் காரணமாலையணி அமைந்துள்ளதும் அறியத்தக்கது.
இங்ஙனம் உ
என்னும் சுட்டெழுத்து இடைமை, பின் / மேல்
ஆகிய பொருளில் இலக்கியங்களில் பயில்கின்றது. இப் பொருள்நீட்சியை அறிந்தால் இலக்கியத்தைச்
செவ்வனே உணர்ந்து சிறக்கலாம்.
நன்றி : இணையத் தரவுகள்
*******
Comments
Post a Comment