321ஆம் குறட்பாவின் தொடர்ப் பொருண்மை

புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

       தனிச் சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ள திருக்குறள் மொழித் தொழில்நுட்பங்களைக் கையாண்டு ஆக்கப்பட்டுள்ளது. அவற்றுள் தொடரமைப்பு உத்தியும் ஒன்றாகும். அதனால் குறட்பாக்களின் தொடர் அமைவை உற்றுநோக்கித் தெளியவேண்டும்.  அவ் வகையில், இரண்டு தொடர்களாலான,

அறவினை யாதெனின் கொல்லாமை. கோறல்
பிறவினை எல்லாந் தரும் ( 321)

என்னும் குறட்பாவை நோக்கலாம். இதிலுள்ள அறவினை × பிறவினை; கொல்லாமை ×கோறல் ஆகிய முரண்மையைக் கருதுக.

முதல் தொடரில்  கொல்லாமையை வலியுறுத்துகின்ற வள்ளுவம் அனைத்து அறச் செயல்களின் பயன்களையும் கொல்லாமை உண்டாக்கும் என்று உறுதியாக எடுத்துரைக்கின்றார். அறவினை என்பதைப் பன்மையாக்கி, பயன்கள் என்பதை வருவித்துக் கருத்தறியலாம். இது உடன்பாட்டுத் தொடராகும்.

அடுத்த தொடர் கொலைச் செயலின் தீமையைச் சுட்டிக்காட்டுகின்றது. மற்ற தீய செயல்களால் உண்டாகின்ற அழிவை, ஒட்டுமொத்தமாகக் கொலைக் கொடுமை ஏற்படுத்திவிடும் என்று எச்சரிக்கின்றார்.

உயிர்ப் பன்மையை எடுத்துரைக்கின்ற உயிரியலாளர் கருத்தும், சூழலியலார் கொள்கையும், உயிரிரக்க நோன்பிகளின் வேண்டுகோளும் இதுவே ஆகும்.  சமயங்களும் இதை வலியுறுத்துகின்றன.

இங்ஙனம் குறட்பாக்களில் விடுபட்ட சொற்களை வருவித்தும் பிற துறைக் கருத்துகளோடு ஒப்பியும் அணுகினால் தெளிவு வாய்ப்பாகும்.

நன்றி : இணையத் தரவுகள்                ******

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு