புறநானூற்றில் எறும்பியல் / பேரிடர் மேலாண்மை / ஒழுங்கியல்

புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

            பழந்தமிழர் இயற்கையோடு இயைந்து இன்வாழ்வு வாழ்ந்தனர் ; அதோடு இயற்கையிலிருந்து விழுமியங்களை வகுத்தனர். அம் முறையில் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பாடிய புறநானூற்றின் 173ஆம் பாடல் எறும்பியலை/ பேரிடர் மேலாண்மையை / ஒழுங்கியலைச் சுட்டுகின்றது.  கீழ்வருகின்ற விக்கிபீடியா விளக்கத்தைக் கருதுக.

எறும்பியல் (Myrmecology) என்பது, எறும்புகள் பற்றி அறிவியல் அடிப்படையில்யும் துறையாகும். இது பூச்சியியலில் ஒரு கிளைத் துறை ஆகும். எறும்புகள் சிக்கலான சமூக அமைப்பைக் கொண்டுள்ளதால், சமூக முறைமைகளின் படிமலர்ச்சி குறித்து ஆய்வு செய்வதற்கா மாதிரியாக இன்றும் எறும்புகள் திகழ்கின்றன. எறும்பியலின் முதன்மைக் கூறுகள்:

·         சமூக அமைப்பு:

எறும்புகளின் சமூக அமைப்பு  மிகவும் சிக்கலானது. இதில், ராணி, ஆண் எறும்புகள், மற்றும் பெண் எறும்புகள் என்று பல படிநிலைகள் உள்ளன.

·         சமூக நடத்தை:

எறும்புகள் ஒருங்கிணைந்து செயல்படும் திறன், தகவல் தொடர்பு, மற்றும் கூட்டு வேலை ஆகியவை சமூக நடத்தைகளாகும்.

·         உயிர்ச் சூழல் பன்முகத் தன்மை:

எறும்புகள் பல்வேறு வகையான வாழ்விடங்களில் வாழ்கின்றன.

·         உயிர்ச் சூழல் பங்கு:

எறும்புகள் பலவிதமான சூழல்மண்டலங்களில் முக்கியப் பங்கு வகிக்கின்றன, உதாரணமாக, மண் வளத்தை மேம்படுத்துதல், விதைகளைப் பரப்புதல், மற்றும் மற்ற பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல் போன்றவை.

·         உயிரியல் பாதுகாப்பு:

எறும்புகளின் பன்முகத்தன்மை மற்றும் உயிரியல் பாதுகாப்பு ஆகியவை பற்றிய ஆய்வு, உயிர்ச்சூழல் பன்முகத்தன்மையை பாதுகாக்கவும், உயிரியல் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உதவுகிறது.

            மேற்படி விளக்கத்தால் மனித நடத்தையை ஆராய எறும்பியல் துணையாவது உணரப்படும். இவ் அடிப்படையில், சிறுகுடி கிழான் பண்ணனின் உணவளிக்கின்ற உயர்வறத்தைப் போற்றுகின்ற  புறநானூற்றின் 173ஆம் பாடலின் கீழ்வருகின்ற 05,06, 07 ஆகிய அடிகள் நோக்கத்தக்கன.

பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி
முட்டை கொண்டு வன்புலம் சேரும்,
 சிறு நுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்ப

 

இவ் அடிகளில் மழை மேகத்தைக் கண்டவுடன் பள்ளத்தில் வாழ்ந்த எறும்புகள் முட்டையைத் தூக்கிக்கொண்டு பாதுகாப்பான மேட்டை நோக்கி வரிசையாக ஊர்கின்றன என்னும் பேரிடர் மேலாண்மையை / பாதுகாப்பு உணர்வை / ஒழுங்கியலை அறியமுடிகின்றது. பேரிடர் நேரும்போது அரசு இத்தகைய அறிவிப்பை விடுப்பது இவண் கருதத்தக்கது.

            இங்ஙனம் இலக்கியங்கள் பல்துறைச் செய்திகளின் உறைவிடமாகத் திகழ்ந்து,   மானுட மேன்மைக்கும் வெற்றிக்கும் வாய்ப்பாவது அறிந்து பயன்கொள்ளத்தக்கதாகும்.

            நன்றி : இணையத் தரவுகள்          ******

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு